Sunday, March 22, 2015

நகரை மீன் - red mullet - goat fish

செந்நகரை,நவரை ,கல் நகரை என்று பலவாறு அழைக்கப்படும் நகரை மீன்கள் சிறிய வகை மீன்களில் ஒன்று. பொதுவான பண்பாக சிவப்பு நிறத்தை கொண்டிருந்தாலும் நகரை மீன்களில் சிறு சிறு வேறுபாடுகளுடன் பல வகைகள் உண்டு. எனினும் சுவையில் ஒன்று போலவே இருக்கும். சிறிய வகை மீன் என்ற போதும் சதைப்பற்றுடன் இருக்கும். கீழே படத்தில் இருப்பவை நகரைகளில் சில வகை.



 குழம்பு,வறுவல் என இரண்டிற்குமே பிரமாதமான சுவையில் இருக்கும் இந்த நகரை மீன்கள் சகாயமான விலைக்கே கிடைக்கும். சென்னையில் ரெகுலராக கிடைக்கும் இம்மீன்களை கிலோ 80லிருந்து 100 வரை பெரிய மார்க்கெட்டுகளில் விற்கிறார்கள்.  சில இடங்களில் பத்து மீன்கள் இருக்குமாறு கூறுகட்டி நூறு ரூபாய்க்கு விற்பார்கள். அதிகபட்சமாக கிலோவிற்கு 120 வரை கொடுத்து வாங்கலாம்.

பொதுவாகவே சிறிய சைஸ் மீன்கள் சுத்தம் செய்ய நேரம் எடுப்பவை என்பதால் அளவில் சிறியதாக இருக்கும் நகரை மீன்களை மார்க்கெட்டிலேயே சுத்தம் செய்து வாங்கிக்கொள்வது நல்லது.

நகரை மீன்களை வறுக்கும் போது அதன் உடற்பகுதில் கத்தியால் மெலிதாய் கீறிவிட்டால் மசாலா   நன்றாக சேர்ந்து அட்டகாசமான சுவையில் இருக்கும். பாரை மீன்கள் போல தோல் அழுத்தமாய் இருக்கும் மீன்களுக்கு இந்த கீறல் முக்கியமாய் தேவைப்படும், மெல்லிய தோலைக்கொண்டிருக்கும் நகரைக்கு கீறல் தேவை இல்லை எனினும் வறுத்த பின் அந்த கோடுகள் பார்வைக்கு உனனே சாப்பிடத் தூண்டும் வகையில் இருக்கும்.முள்ளில் இருந்து எளிதாக சதைப்பகுதியை பிரித்தெடுக்க முடியும் இந்த நகரை மீன்களை வைத்து ஃபிங்கர் ஃபிஷ் போன்ற ரெசிப்பிகளை மிகுந்த சுவையுடன் செய்யலாம். மேலும் குறைந்த விலையில் ரிச்சான டிஷ் கொடுத்த மாதிரியும் இருக்கும். வெறும் ரசம் வைத்து நான்கு துண்டுகள் நகரை மீன் வறுவல் இருந்தால் தட்டு தட்டாய் சோறு இறங்கும்.

நகரை மீன்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, சிறிய சைஸ் சங்கரா மீன்கள் பார்வைக்கு நகரைப் போல இருப்பதால் அவற்றையும் நகரை என்று தள்ளிவிடுவார்கள். சிறிய சைஸ் சங்கராவில் முள்ளில் இருந்து சதையை எடுத்து சாப்பிடுவது சிரமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் நகரை சைஸில் இருக்கும் சங்கரா மீன் சாப்பிட ஏதுவானது கிடையாது எனலாம்.போலவே சங்கரா வாங்கும்போது நகரையையும் சேர்த்து கொடுப்பார்கள். சங்கரா மீன்கள் நகரையைவிட விலை கூடுதலாய் விற்கப்படும் மீன்கள் என்பதால் அதிக விலைக்கு நகரையை சங்கரா என்று விற்றுவிடுவார்கள். சிவப்பு நிறத்தில் இன்னும் நிறைய மீன்கள் உண்டு அவற்றையும் நகரை என்று விற்பார்கள். அவை நகரை என்று கன்ஃபார்ம் செய்துகொள்ள முதல் படத்தில் தெளிவாய் தெரியும் ஆட்டுத்தாடி அமைப்பை சரிபார்த்தால் தெரிந்துவிடும்.


2 comments:

  1. நகரைப் பற்றிய நல்ல தகவல்கள் அருமை.சங்கராவிற்கும், நகரைக்கும் உள்ள வித்தியாசத்தை படம் மூலம் எளிதாக விளக்கி விட்டீர்கள். தொடருங்கள். தொடர்கிறோம்.

    ReplyDelete
  2. பிரான்சில் மிக விலை அதிகமான மீன், இவை பவளப்பாறைகளை உண்பதால் அவற்றுக்கு சுவை அதிகம் என்கிறார்கள்.

    ReplyDelete