Sunday, March 15, 2015

காரப்பொடி (Ponyfish)

பொதுவாக மீன் பிரியர்கள் வஞ்சிரம்,வாவல்,ஷீலா,கொடுவா என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் இந்த பட்டியலைத் தாண்டி வேறு மீன்களை வாங்க மாட்டார்கள். இவற்றைவிட விலை குறைவாக, அதே வேளையில் வஞ்சிரம் வாவலுக்கு சுவையில் ஈடு கொடுக்கும் எத்தனையோ மீன் வகைகள் உண்டு. இவற்றைக் குறித்து தெரிவதில்லை என்பதால் எதற்கு ரிஸ்க் என்று பழகிய மீன் லிஸ்ட்டிலேயே நின்றுவிடுகிறார்கள்.

மீன்கள் வாங்கும் போது எல்லா வகை மீன்களும் குழம்பிற்கும் வறுவலுக்கும் உகந்ததாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரிய சைஸ் மீன்கள் வாங்கும்போது பெரும்பாலும் அந்த மீனின் தலை,வயிறு மற்றும் வால் பகுதிகளை குழம்பிற்கும் மற்றவற்றை வறுக்கவும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக வஞ்சிரமோ, வாவலோ வறுவலில் இருக்கும் சுவை குழம்பில் இருக்காது. கிலோவிற்கு  500 ரூபாய் கொடுத்து இம்மாதிரி பெரிய மீன்களை வாங்கும்போது குழம்பிற்கென்று ஒரு ஐம்பது ரூபாய்க்கு காரப்பொடி, நகரை, சுதும்பு, பன்னா போன்ற பொடி மீன்களை வாங்கிவிட வேண்டும். பெரிய மீன்களைவிட பொடி மீன்களே குழம்பிற்கு சுவை கொடுப்பவை. சாப்பிடவும் ருசியாக இருக்கும். இந்த பொடி மீன்கள் சில நேரங்களில் எல்லா மீன்களும் கலந்த மாதிரியும் கிடைக்கும். அப்படி கிடைக்கும் போது தவற விடக்கூடாது. இப்படி கலந்து கிடைக்கும்  மீன்களை பல பொடி என்பார்கள். பல பொடிகளைப் போட்டு வைக்கும் குழம்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது எனலாம்.

பொடி மீன்களில் ஒன்றான காரப்பொடியைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

காரப்பொடியில் பெரிய சைஸ் மீனே அதிகபட்சமாக 200 கிராம் எடை உள்ளதாக இருக்கும். இந்த பெரிய சைஸ் காரப்பொடி கிலோ 150 வரை கிடைக்கும். சிறிய சைஸ் கிலோ 60லிருந்து 100 வரை சைஸிற்கு ஏற்றவாறு கிடைக்கும்.





செதில்கள் இருக்காது,குடலின் சைஸ் மிக சிறியது என்பதால் சுத்தம் செய்வது எளிது. இவற்றின் மேல் பகுதியிலும் வயிற்றுப் பகுதியிலும் தடிமனான முட்கள் இருக்கும். அவற்றை வெட்டுவது மட்டும் சிறிது சிரமாக இருக்கும். மீனின் உள்ளே நடு முள் மட்டுமே இருக்கும். அவையும் மிகுந்த கடினத்தன்மையுடனே இருக்கும். தலையும் மற்ற மீன்களைப் போல மென்று தின்ன இயலாத மாதிரி அழுத்தமாகவே இருக்கும். ஆனால் இரண்டு பக்கமும் இருக்கும் சதைப் பகுதியின் சுவையும் ,குழம்பில் விரவிக்கிடக்கும் இதன் வாசனையும் கவளம் கவளமாக சோற்றை இறக்கும்.பெரிய மீன்களின் தலை,வால் போன்றவற்றை வைத்து வைக்கும் மீன் குழம்பில் பேருக்கு இரண்டு காரப்பொடி சேர்த்தாலே அந்த குழம்பின் சுவை பிரமாதமாய் மாறிவிடும்.

இந்த காரப்பொடி மீனில் பெரிய சைஸ் கிடைத்தால் வறுக்கலாம் எனினும் குழம்பிற்குதான் இது மிக நன்றாக இருக்கும். காரப்பொடியின் கருவாடும் மிகுந்த சுவையுடையது.

காரப்பொடியை சமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது மிளகு பூண்டு அதிகமாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தேங்காய் சேர்க்கக்கூடாது. தேங்காய் சேர்த்தே ஆக வேண்டுமென்றால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். சற்று கூடுதல் ஆனாலும் காரப்பொடியின் சுவை கிடைக்காது.

மீனை வாங்கும் போது செவுள் ரத்தச் சிவப்பில் இருக்க வேண்டும். இல்லையென்றாலும் குறைந்த பட்சம் சிவப்பு நிறமாவது தெரியும்படி இருக்க வேண்டும். கண்கள் கருப்பு நிறத்தில் மேலே முதலில் கொடுத்திருக்கும் படத்தில் இருப்பது போல இருக்க வேண்டும். வெள்ளை நிறத்தில் தெரிந்தால் அது மிக மோசமான கண்டிஷனில் உள்ள மீன் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


9 comments:

  1. Could you give review for thirukkai?

    ReplyDelete
  2. நல்ல முயற்சி. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. @நரேந்திரகுமார்,
    வாரம் ஒரு மீன் என்று இங்கே பகிர எண்ணம். திருக்கைக்கு என்று ஒரு வாரம் வரும். :-)

    ReplyDelete
  4. @துபாய் ராஜா,
    நன்றிங்கோ.

    ReplyDelete
  5. Good effort please include scientific names also

    ReplyDelete
  6. இதைக் காரை மீன், அல்லது காரைப் பொடி என இலங்கையில் குறிப்பிடுவார்கள்.

    ReplyDelete
  7. அருமையான பதிவு. பயனுள்ள பதிவு. நிறைய மீன்களை பற்றி பதிவிடுங்கள்

    ReplyDelete