Wednesday, December 27, 2017

அம்பட்டன் கத்தி

மீன் விற்கிற விலையில் வாரத்திற்கு ஒரு முறை மீன் வாங்குவது என்பதே கட்டுப்படி ஆவதில்லை ஆனாலும் மீனுக்கு ஆசை என்ன செய்ய என்ற ஆதங்கத்திற்கு என்னால் ஆன தொண்டாக ' பட்டையைக் கிளப்பும் சுவையில் பட்ஜெட் மீன்கள்' என்று எனக்குத் தெரிந்த குறிப்புகளை அவ்வப்போது வழங்கலாம் என்றிருக்கிறேன்.
பட்ஜெட் மீன்கள் என்பதால் கௌரவக் குறைச்சல் என நினைக்கும் ஆட்கள் வஞ்சிரம் வாங்கியே உய்யவும். கிலோ ஐம்பதுக்கு கிடைக்கும் மீனில் வாவலின் சுவையைக் காணும் வழி வகைகளை இங்கே பார்ப்போம்.
இன்றைக்கு எடுத்துக்கொள்ளப் போகும் மீன் பெயர் மேனீ மக்குலாட்டா (Mene maculata) - அம்பட்டன் பாரை, அம்மாடிகட்டி, அம்பட்டன் கத்தி (நன்றி பெயர் காண உதவிய விக்கிபீடியாவிற்கு). சென்னையில் இதனை காரை , பெரிய காரைப் பொடி என்று சொல்கிறார்கள். ஆனாலும் காரப்பொடி வேறு வகை, அதனோடு இதைக் குழப்பிக் கொள்ளாமல் இருக்க படத்தைப் பார்த்து மனதில் இருத்திக் கொள்க.

இந்த மீன்கள் ஏப்ரல்,மே மாதங்களில் நிறைய விற்பனைக்கு வரும். மற்ற டைமில் அவ்வப்போது காணக் கிடைக்கும். ஒன்றரை கிலோ நூறு ரூபாய்க்கு சமீபத்தில் வாங்கினேன். மிகவும் சுவை குறைந்த மீன் வகை என்பதே இதன் விலை குறைவிற்குக் காரணம். உண்மையும் கூட.
சுவையில் மரக்கட்டைக்கும், இதற்கும் யாதொரு வேறுபாடும் காண இயலாது. ஆனால் இதே மீனை வாவலின் சுவையில் கொண்டுவர எளிய வழி உள்ளது. மீனை சுத்தம் செய்து மஞ்சள் பொடியும், உப்பும் வழக்கத்திற்கு மாறாக சற்றே கூடுதலாய்க் கலந்து, சோம்புத்தூள், மிளகாய்ப்பொடி (விரும்பினால் பூண்டு பேஸ்ட்) சேர்த்து ஃப்ரிஸரில் வைத்துவிடவும்.
அடுத்த நாள் காலையில் எடுத்து வெளியில் வைத்தால் இரண்டு மணி நேரத்தில் ஐஸ் உருகி மதிய சமையலுக்கு வருவல் செய்ய தயாராகிவிடும். (மசாலா ஃப்ரெஷ்ஷாக சேர்க்க விரும்பினால் , வெறும் உப்பு மஞ்சள் தூள் கலந்து ஃபிரிஸரில் வைத்து மசாலாவை அடுத்த நாளும் சேர்த்துக் கொள்ளலாம்).
தயாரான மீனை வருவல் செய்து சுவைக்கும் போது வாவல் மீன் என்று சொல்லி கொடுத்தாலும் ஆமாம் என்றே தோன்றும் சுவையோடு இருக்கும். மதியம் வருவல் செய்த மீனை சூடு ஆறியதும் ஃபிரிஜ்ஜில் வைத்து இரவுக்கு சாப்பிடுவீர்களேயானால் இரட்டிப்பு சுவையோடு இருக்கும். பொதுவாக சுடச் சுட மீன் வருவல் சாப்பிடத்தான் விரும்புவோம். விரால் மீனெல்லாம் சூட்டோடு சாப்பிடும் போது அள்ளும், ஆனால் இந்த அம்பட்டன் பாரை ஆற ஆற வெல்லும்.
ஆமாய்யா, மீனை வாங்கினோமோ தின்னமான்னு இல்லாம இப்படி பொறுமையெல்லாம் ஆகாது என்போருக்கு, நானும் பரக்காவெட்டிதான் என்று சொல்லிக் கொள்கிறேன், அன்றைய நாளுக்கு பரக்காவட்டி நாக்கிற்கு என்ன மீன் வேணுமோ அதை வாங்கிக் கொண்டு அப்படியே இந்த மீன் கண்ணில் படும் போது இரண்டு கிலோ வாங்கி வந்து ஃப்ரிஸரில் வைத்துக் கொள்க.வாரம் முச்சூடும் சுவையான மீன் சாப்பிடலாம். வெறும் ரசம் பிளஸ் ரெண்டு துண்டு வருவல் என நம்ம பர்சுக்கும் பங்கம் வராது.

No comments:

Post a Comment